புளியங்குடி, கடையநல்லூர் நகராட்சிகளில் 2017 முதல் ஆணையராக பணியாற்றி, தற்போது பதவி உயர்வு பெற்று உடுமலை நகராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளவர் பவுண்ராஜ்.
அவர் மீது புளியங்குடி நகர வரி செலுத்துவோர் நலஉரிமை சமூக பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவருக்கு புகார் மனு அனுப்பியிருந்தனர்.
அதில், புளியங்குடி நகராட்சி ஆணையராக பணியாற்றிய போது தினசரி சந்தையை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்டாமலும், அதில் இருந்த பொருட்களை கணக்கில் கொண்டு வராமல் மறைத்தும் ரூ. 90 லட்சம் மோசடி செய்தார். வீட்டுக்கு ரூ.20 ஆயிரம் கையூட்டு பெற்று குடிநீர் இணைப்பு வழங்கி ரூ.3.75 கோடி வரை ஊழல் செய்தார். ஊழியர், ஒப்பந்தகாரர் நியமனத்திலும், பேரூந்து நிலைய கடைகளை வாடகைக்கு விடுவதிலும் முறைகேடுசெய்தார். அவருக்கு சொந்தமான பேவர் பிளாக் கல்தொழிற்சாலைக்கு சட்டவிரோதமாக தார்சாலை அமைத்தார் என 12 புகார்களை தெரிவித்திருந்தனர்.
இதேபோல் அய்யாபுரத்தைச் சேர்ந்த சின்னத்துரை என்பவர் அனுப்பியுள்ள புகாரில், ‘ஆணையர் தனது கிருஸ்தவ பேரான பவுல்ராஜ் என்பதை மறைத்துவிட்ட பவுண்ராஜ் என மாற்றி முறைகேடாக ஆதிதிராவிடராக சான்றிதழ் பெற்றுள்ளார். பதவி மூலம் ரூ.10 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். அவர் மீது புகார் தெரிவிப்பவர்களை அடியாட்களை வைத்து மிரட்டுகிறார் என குறிப்பிட்டிருந்தார்.
சித்தார்த்தன் என்பவர் ‘பள்ளி சத்துணவு சமையல் அறை இருந்த இடத்தை தனிநபருக்கு கடைகட்டி கொள்ள முறை கேடாக அனுமதி வழங்கினார்’ என்றும், சிந்தாமணியைச் சேர்ந்த சங்கர் குடிநீர் இணைப்புக்கு முறைகேடாக பணம் பெற்றார்’ என்றும் புகார் கூறியிருந்தனர்.

இதையடுத்து புகார் தெரிவித்தவர்களிடம் உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்தனர். இந்த விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சோ. அய்யர், அனைத்து புகார்களையும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகம் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.












