மதுரை விளக்குத்தூண், மகால் ரோடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார்- இந்துமதி என்ற தம்பதியினருக்கு 2 வயதில் ஸ்ரீஜா என்ற மகளும் ஒரு வயதில் மகனும் உள்ளனர். கிருஷ்ணகுமார் தனது சொந்த வீட்டில் மேல் பகுதியிலும், கீழ் தளத்தில் அவரது தாயார் மற்றும் தம்பி ராம்குமார்(36) ஆகியோரும் வசித்துவருகின்றனர்.
கிருஷ்ணகுமாரின் இளைய சகோதரர் ராம்குமார் சென்னையில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்துவந்த நிலையில் ஊரடங்கு காரணமாக மதுரைக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சகோதரர்களுக்கு இடையே சொத்து பிரச்சனை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுகொண்டே இருந்துவந்துள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் வீட்டில் உள்ள தண்ணீர் குழாயை ராம்குமார் உடைத்துள்ளார்.. இது குறித்து அண்ணன் கிருஷ்ணகுமார் கேட்ட போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த தம்பி ராம்குமார் கத்தியை எடுத்து அண்ணனை கொலை செய்ய முயன்றுள்ளார். கத்தியுடன் வருவதை பார்த்து கிருஷ்ணகுமார் வீட்டிற்குள் சென்றபோதும் விரட்டி சென்ற தம்பி ராம்குமார் அண்ணன் கிருஷ்ணகுமாரின் கண் மற்றும் கைகளில் கத்தியை வைத்து சரமாரியாக குத்தியுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த அண்ணி இந்துமதி பயந்து சத்தம் போட்டபோது அவரையும் குத்தி கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்த நிலையில் தொடர்ந்து கூச்சலிட்டபடி அங்கும் இங்கும் ஓடிய ராம்குமார் கிருஷ்ணகுமாரின் வீட்டில் உறங்கிகொண்டிருந்த
2 வயது குழந்தையான ஸ்ரீஜாவின் நெஞ்சு, கழுத்தில் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஒடிவிட்டார்.

கத்திகுத்தால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய குழந்தை மற்றும் காயம் அடைந்த கணவர் கிருஷ்ணகுமார் ஆகிய இருவரையும் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குஅழைத்துசென்று மருத்துவ பரிசோதனை செய்ததில் குழந்தை ஸ்ரீஜா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். படுகாயம் அடைந்த கிருஷ்ணகுமாருக்கு தீவிர சிகிச்சை வழங்கிவருகின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளக்குத்தூண் காவல்துறையினர் ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவனை தேடிவந்த நிலையில் மஹால் தெரு பகுதியில் மறைந்திருந்தபோது அவரை கைது செய்தனர்.













