திருப்பதி பிரமோற்சவ நிறைவு நிகழ்ச்சியாக சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.
கடந்த 10 நாட்களாக நடந்த பிரமோற்சவ விழாவில் மலையப்ப சுவாமிகள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் தினம் ஒரு வாகனத்தில் சர்வலங்காரத்துடன் வீதியுலா வந்தார்.
நூற்றுக்கணக்கானோர் தினமும் ஆடிப்பாடி துதிக்க, இலட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை நிறைவு நிகழ்ச்சியான சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.
திருக்கோவில் புஷ்கரணிக்கு சுவாமி தேவி சமேதரராய் எழுந்தருளினார். அவருடன் சக்கரத்தாழ்வாரும் வந்தார். உற்சவருக்கு திருமஞ்சனம் நடத்தியபின்பு, தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாரை 5 முறை முழுக்காட்டினர். அப்போது பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என முழக்கமிட்டனர். சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி மகிழ்ந்தனர்.











