கொரோனா இதுவரை பல அவதாரங்கள் எடுத்திருப்பினும், ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா ஆகிய நான்கு திரிபுகள் இதுவரை கவலைக்குரிய கொரோனா திரிபுகளாக உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது. அவற்றில் டெல்டா பாதிப்பு இந்தியாவை போதுமான அளவு பயமுறுத்திவிட்டது. தற்போது ‘லேம்டா’ திரிபு ’கவனிக்கப்பட வேண்டிய திரிபு’ என என உலக சுகாதார நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது.
உலக சுகாதார அமைப்பின் தகவல்படி பெரு நாட்டில் லிமா நகரில் இது கண்டறியப்பட்டது. இதுவரை 29 நாடுகளில் பாதித்துள்ளது. C.37 என முன்னர் அழைக்கப்பட்ட லேம்டா, டெல்டா, டெல்டா பிளஸ் திரிபுகளை விட மிகவும் வேகமாகப் பரவக் கூடியது, தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாதது என்ற அச்சம் உள்ளது. இத்திரிபு வேகமாகப் பரவும் என சிலியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது.
லேம்டா தவிர, ஈட்டா, அயோட்டா, காப்பா, ஆகிய திரிபுகளும் கண்காணிக்கப்படும் கொரோனா திரிபுகளின் பட்டியலில் உள்ளன. இவற்றில் காப்பா திரிபு இந்தியாவில்தான் முதன்முறையாகக் கண்டறியப்பட்டது என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
மொத்தத்தில் கொரோனா அலை, என்றுமே முடிவுக்கு வராத சிந்துபாத் தொடர்கதையாகவே தெரிகிறது.














