யாஸ் புயலின் காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்ததன் காரணமாக மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம் , சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. 143 அடி கொள்ளவு கொண்ட பாபநாசம் அணை 119.06 அடியில் இருந்து ஓரே நாளில் 10 அடி உயர்ந்து 129.15 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 9563 கன அடித் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதுபோன்று 156 அடி கொள்ளவு கொண்ட சேர்வலாறு அணை 135 அடியில் இருந்து 16 அடி உயர்ந்து 151 அடியாக உயர்ந்துள்ளது. 118 அடி கொள்ளவு கொண்ட மணிமுத்தாறு அணை 84 அடியில் இருந்து 4 அடி உயர்ந்து 88 அடியாக உயர்ந்துள்ளது. 52 அடி கொள்ளவு கொண்ட கொடுமுடியாறு அணை 5 அடி உயர்ந்து 27.25 அடியாக உள்ளது. தொடர்ந்து மழை நீடித்தால் அணைகள் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பாபநாசம் பகுதியில் 41 மில்லி மீட்டரும் , சேர்வலாறு பகுதியில் 28 மில்லி மீட்டரும் , மணிமுத்தாறு பகுதியில் 20.04 மில்லி மீட்டரும் , நம்பியாறு பகுதியில் 23 மில்லி மீட்டரும் , அம்பாசமுத்திரம் பகுதியில் 27 மில்லி மீட்டரும் , சேரன்மகாதேவியில் 14.4 மில்லி மீட்டரும் , நாங்குநேரி பகுதியில் 23 மில்லி மீட்டரும் , ராதாபுரம் பகுதியில் 11 மில்லி மீட்டரும் , களக்காடு பகுதியில் 10.6 மில்லி மீட்டரும் , பாளையங்கோட்டையில் 6 மில்லி மீட்டரும் , நெல்லையில் 6.4 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
தொடர் மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.















