உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 14-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினரை முடிவு செய்வதற்காக இந்திய மல்யுத்த சம்மேளனம் சார்பில் தகுதி சுற்று போட்டி டெல்லியில் நடந்தது. இதில் 74 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் சுஷில்குமார், ஜிதேந்தர் குமார் ஆகியோர் மோதினார்கள்.
பரபரப்பாக அரங்கேறிய இந்த பந்தயத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சுஷில்குமார் 4-2 என்ற புள்ளி கணக்கில் ஜிதேந்தர்குமாரை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்தார்.
டெல்லியை சேர்ந்த 36 வயதான சுஷில்குமார் 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கமும், 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் வென்றவர் ஆவார்.
மேலும் 2010-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவர் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக போட்டியில் பங்கேற்க இருக்கிறார்.