சொக்கன்குடியிருப்பை சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வன் (32). லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்துவந்தார். அவர் பக்கத்து ஊரைச்சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவரின் சகோதரரிடம் நிலம் வாங்கியது தொடர்பாக அதிமுக பிரமுகருக்கும் அவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், செல்வன் சாத்தான்குளத்திலிருந்து இன்று பகலில் ஊருக்கு பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தபோது, கொழுந்தட்டு அருகே காரில் வந்த சிலர் பைக்கில் மோதி கவிழ்த்து அவரை கடத்திச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் தேடிவந்த நிலையில், கடக்குளம் & திசையன்விளை சாலையோர காட்டில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் செல்வனை சிலர் பார்த்து திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.
இந்த சம்பவத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம். ஏற்கனவே போலீசார் நிலப்பிரச்சினையில் ஒரு சார்பாக செயல்பட்டனர் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
செல்வனின் மனைவி நிறை கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.








