‘பிச்சை எடுத்தாராம் பெருமாளு, அதை பிடுங்கி தின்னராம் அனுமாரு’ என்ற சொலவடை வழக்கில் உண்டு. அந்தக் கதையாக தமிழகத்தின் பிரபல கொள்ளையனான முருகனிடம் சென்னை இன்ஸ்பெக்டர் லஞ்ச கொள்ளையடித்த கதை கடந்த சில நாட்களாக உலாவினாலும், அதுகுறித்து சத்தமே இல்லாமல் சப்தநாடியும் ஒடுக்கி கிடக்கிறது சென்னை மாநகர காவல்துறை.
சென்னையில் நடந்த கொள்ளை வழக்குகளில் தன்னை கைது செய்யாமலிருக்க 10 லட்சம், 20 லட்சம் என இரு தவணையாக ரூ.30 லட்சத்தை நொளம்பூர் போலீசின் அப்போதைய இன்ஸ்பெக்டரிடம் சுளையாக கொடுத்திருக்கிறார் முருகன். காபி ஷாப் ஒன்றின் அருகே காரிலிருந்தவாறு இந்த பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.
கொள்ளையர் முருகனிடம் கொள்ளையடித்த இன்ஸ்பெக்டர் நடந்த கொள்ளையை மறைக்க மட்டுமல்ல, நடத்தவிருந்த கொள்ளையை ஊக்குவிப்பவராகவும் இருந்துள்ளார். இப்படிப்பட்ட கொடுங்குற்றவாளியை விசரிக்காமல் ரகசியம் காப்பது காவல் துறைக்கு மட்டுமல்ல, தமிழக அரசுக்கும் இழுக்கு.














