பல்லவர் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கு ம் மாமல்லபுரம் சிற்பக்கோயில் மற்றும் கல் ரதம் உள்ளிட்ட படைப்புகள் அலைகடலோரம் அழகுறை அமைந்து அனைவரையும் ஈர்ப்பவை. ஆனால், சுற்றுலாத்தலங்களுக்கே உரிய சுத்தக்குறைபாடு இருந்ததாலும், கற்சிற்பங்களை தூய்மைப்படுத்தி, வேதிக்கலவையிட்டு மெருகூட்டாதாததாலும். சுற்றுப்புற அழகை பேணாததாலும் இதுவரை தூசி படிந்த ஓவியமாய் இருந்தது.
இந்நிலையில், மோடி & ஜி ஜின்பிங் சந்திப்புக்கு பிறகு மாமல்லபுரமே பொலிவேற்றப்பட்டு புது மெருகுடன் காணப்பட்டது. இவ்வளவு செலவழித்து, சிரமப்பட்டு பேணிய எழிலை குன்றாமல், குறையாமல் பாதுகாப்பது எளிது.
பேரூராட்சி நிர்வாகம், வருவாய், சுற்றுலாத்துறையினர் மன்து வைத்தால் இதை நீண்ட காலம் இப்படியே நீட்டிக்கலாம். இரு நாட்டு தலைவர்கள் சந்திப்புக்கு பின் மாமல்லபுரத்தில் குவிந்த மக்களின் மனநிலையும் இவ்வாறே இருந்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்தும் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இரவிலும் பயணிகளை ஈர்க்கும் வகையில் வண்ண விளக்கொளியை முக்கிய இடங்களிலாவது ஒளிரவிடவேண்டும். வாகன நிறுத்துமிடம், வணிக நிலையங்களை அவரவர் சரியாக பராமரிக்கவேண்டும். அதுபோல், ஆங்காங்கே பாதுகாவலரை நியமித்து தூய்மையை பேணினால் தினமும் நூற்றுக்கணக்கில் பார்வையாளர்கள் குவிவது உறுதி. இதனால் செலவழிக்கும் பணம் திரும்ப கிடைக்கும். சுற்றுலா வருவாய் பெருகும் என்பதே இப்பகுதி மீனவர் வியாபாரிகளின் கோரிக்கையாகவும் இருக்கிறது.














