சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்துக்கு நெருக்கமாக அமைந்துள்ள கல்குவாரியால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதையடுத்து அந்த கல்குவாரி மூடப்பட்டது. சில நாட்களுக்கு பிறகு அருகில் உள்ள கல்குவாரி லாரிகளை மறித்ததாக பொதுமக்கள் சிலர் மீது வழக்கு போடப்பட்டது. அது பொய் வழக்கு என்று பொதுமக்கள் கூறிவந்தனர். குறிப்பாக சம்பவம் நடந்ததாக போலீஸ் கூறும் அந்த நாளில் ஊரில் இல்லாதவர்களையும் வழக்கில் சேர்த்ததாக அவர்கள் கூறினர்.
ஆனாலும் வழக்கு தொடுக்கப்பட்ட ஆறு பேர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வந்தனர். அதில் ஒருவருக்கு உடல் நலம் இல்லாததால் மீதி ஐவர் கையொப்பமிட்டனர். அதில் ஒருவர் இறுதி நாளான நேற்று வரவில்லை.
இதையடுத்து சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமார் இது குறித்து எச்சரித்துள்ளார். மேலும், வழக்கில் மற்றும் பலர் என்று இருப்பதனை காரணம் காட்டி, ஊர்க்காரர்கள் அனைவரையும் வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
அவரது மிரட்டலால் பாதிப்படைந்த மாடசாமி என்ற இளைஞர் அங்கேயே மயங்கி விழுந்தார். உடன் இருந்தவர்கள் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கையொப்பமிட வந்த தங்களை தேவையில்லாமல் மிரட்டியதாக உடன் வந்தவர்கள் தூத்துக்குடி எஸ்பியிடம் புகார் தெரிவித்தனர். அவரது அழைப்பின் பேரில் இன்று நேரிலும் தங்கள் புகாரை தெரிவிக்க செல்கின்றனர்.