எந்த மாநிலத்துக்கு சென்றாலும் அந்த மாநிலத்தவர்போல் ஆடை அணிகலன் அணிந்து காட்சியளிப்பவர் நம் பிரதமர் மோடி. தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் தமிழின் சிறப்பை சொல்வதற்கு தயங்கியதில்லை. ஆனாலும், இதுவரை வேட்டி கட்டிய தமிழனாக மாறவில்லையே என்ற குறை இருந்துவந்தது.
அந்த குறையை போக்கும் வகையில் இன்று ஜி ஜின் பிங்குக்கு மாமல்லபுரம் கடற்கரையில் சிற்பங்களையும் கடற்கரை கோயிலையும் சுற்றிக்காட்டியபோது வேட்டி கட்டிய தமிழனாகவே வலம் வந்தார்.
மோடி வேட்டி, சட்டை உடுத்தி, தோளில் துண்டு தொங்க கலைப்படைப்புகளை சுட்டிக்காட்டி சீன அதிபருக்கு விளக்கியபோது ஏதோ நம்மூர்க்காரரே விவரம் சொன்னதுபோல் இருந்தது.
மோடியின் மாற்றமான தோற்றத்தை பார்க்கும்போது இந்த சந்திப்பு மகிழ்ச்சிகரமாக நடந்து முடிந்தபின்பு தமிழர் மீது அவரது பார்வை பாரிவாக மாறும் என்றார் ஓர் அரசியல் விமர்சகர்.
எவ்வாறாயினும், பழமையான தமிழர் கலை, கலாச்சார மாண்பை இரு நாட்டு தலைவர்கள் அறிய இந்த சந்திப்பு உதவும் என்பது பொதுக்கருத்தாக உள்ளது.














