நாங்குநேரி இடைத்தேர்தல் இப்போதுதான் சூடு பிடிக்கிறது. முக்கிய தலைவர்கள் முகாமிட்டுவிட்டனர். ஆயுத பூஜைக்கு கூட விடுப்பு எடுக்காமல் அனைத்துக்கட்சியினரும் அம்பாக பாய்கின்றனர். அவ்வப்போது எரியீட்டிகளாக அனல் சொற்களை வீசி எறிகின்றனர்.
மூலக்கரைப்பட்டியில் பிரசாரத்தை தொடங்கிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘ பதவி வெறி காரணமாக இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்டது. தேர்தலுக்கு காரணமானவர்களிடமிருந்து தேர்தல் செலவை வசூலிக்கவேண்டும்’ என்றார்.
காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரியோ, ‘ ரூபி மனோகர் ராணுவ வீரர். அவர் நாட்டை காத்ததுபோல் நம்மையும் காப்பார்’ என்று நாங்குநேரியில் பேட்டியளித்தார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், ‘ அதிமுகவில் களப்பணியை விட, பணப்பணியே நடக்கிறது’ என்றார்.
ரெட்டியார்பட்டியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘ தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று ஸ்டாலின் சொல்கிறார். அப்படி சரி இல்லையென்றால், எப்படி பிரதமரும் சீன அதிபரும் இங்கு வருவார்கள்?’ என்று கேட்டார்.
நாங்குநேரியில் திசைக்கொரு முக்கிய பிரமுகர் மூலை முடுக்கில் நின்று பேசுவது மக்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.








