நாடு முழுவதும் இ சிகரெட்டிற்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் பேட்டி அளித்தனர். அப்போது, நாடு முழுவதும் இ சிகரெட்டிற்கு தடை விதிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், இ சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி, விற்பனை, இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இ சிகரெட்டை தடை செய்வதற்கான அவசர சட்டம் 2019, சமீபத்தில் அமைச்சரவை குழுவால் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டது. பிரதமர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில் அமைச்சரவை குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த வரைவு அவசரச் சட்டத்தில், இ சிகரெட் தடையை முதல் முறை மீறுபவர்களுக்கு அதிகபட்சம் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.















