4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கிளைமாக்சை நெருங்கி விட்டது. திண்டுக்கல் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்சை எதிர்கொள்கிறது.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கடந்த ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறியது. இந்த சீசனிலும் அந்த அணி சிறப்பாகவே செயல்பட்டது. லீக் சுற்றில் 6 ஆட்டத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணி, கோவை கிங்சுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதல் தோல்வியை சந்தித்தாலும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியிடம் தோல்வி கண்டது.
மதுரை பாந்தர்ஸ் அணி லீக் ஆட்டத்தில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் (திண்டுக்கல், காஞ்சி வீரன்ஸ் அணிகளிடம்) புள்ளி பட்டியலில் 3-வது இடம் பெற்றது. முதல் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மதுரை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு பதிலடி கொடுத்து 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சென்னையில் 15-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை சந்திக்கும்.
இறுதிப் போட்டி வாய்ப்புக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை மோதி இருக்கின்றன. இதில் திண்டுக்கல் அணி 5 முறையும், மதுரை அணி ஒரு முறையும் வென்று இருக்கின்றன. இந்த சீசனில் திண்டுக்கல் அணி நத்தம் மைதானத்தில் எந்தவொரு போட்டியிலும் தோல்வியை சந்திக்கவில்லை.