பவானி அடுத்த குருப்பநாயக்கன்பாளையம் விதைப்பண்ணை அருகே வசித்து வரும் செல்லமுத்து மகன் சக்திவேல் (47) பவானியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த சில நாட்களாக 11-ம் வகுப்பு பயிலும் இரண்டு மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரிய வந்ததது.
இது குறித்து மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்ததையடுத்து ஆத்திரமடைந்த பெற்றோர் தங்களது உறவினர்களுடன் பள்ளியை முற்றுகையிட்டு தவறான முறையில் நடக்கும் ஆசிரியரை பணி நீக்கம் செய்திட வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் பவானி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் ஆசிரியர் சக்திவேல் தலைமறைவானார்.
புகாரின் பேரில் ஆசிரியரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சக்திவேலை தேடி வந்தனர்.
இந்நிலையில் லட்சிநகர் பஸ் ஸ்டாப்பில் சங்ககிரி செல்வதற்காக சக்திவேல் நின்று கொண்டிருந்தார். பவானி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வினோதினி அவரை கைது செய்தார். பின்னர் சக்திவேல் கோர்ட்டில் ஆஜர்படுத்தபட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.












