மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய மோட்டார் வாகனச்சட்டம் குறித்து மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில் கூறும்போது, “சமீபமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல் படுத்தப் பட மாட்டாது. ஏனெனில் அபராதத் தொகைகள் கடுமையாக இருக்கின்றன. நாங்கள் ஏற்கெனவே உருவாக்கிய ‘பாதுகாப்பான பயணம் பாதுகாப்பான வாழ்க்கை’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தையே இன்னும் தீவிரப்படுத்துவோம்.
இது நிறைவேற்றப்பட்ட அன்றே எங்கள் கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவர்கள் காதில் வாங்கவில்லை. மக்களை வதைக்கும் இத்தகைய சட்டங்களை ஒருபடித்தாக எடுக்கக் கூடாது. இப்போது விதிமீறல் என்றால் ரூ.500 அபராதத்துக்குப் பதிலாக ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகிறது. ஏழை மக்களும் சிக்குகின்றனர், இத்தனை பணத்துக்கு அவர்கள் எங்கு செல்வார்கள்?
ஆகவே பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போது மனிதாபிமான அடிப்படையில் காண வேண்டும். இது மக்கள் மீது அதிக சுமையைச் செலுத்துவதாகும்.” என்றார் மம்தா பானர்ஜி.












