உலகப்புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பைக், வேன், லாரிகள் மூலம் குலசேகரன்பட்டினத்திற்கு மாலைபோட bவருகை தந்தனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள கீழச் செக்காரக்குடியைச் சேர்ந்த கிராம மக்கள் 70 பேர் வேன் மற்றும் லோடு ஆட்டோவில் குலசேகரன்பட்டினம் வந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் நேற்று மதியம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மாலை அணிந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு அதே வாகனத்தில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த லோடு ஆட்டோவில் 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்துள்ளனர்.
அவர்கள் வந்த லோடு ஆட்டோ கல்லாமொழி அனல்மின் நிலையம் அருகே, முன்னால் சென்ற வாகனங்களை முந்தி சென்றபோது எதிரே வந்த மினி லாரியின் மீது நேராக மோதியது. இதில் லோடு ஆட்டோவில் வந்த 9 பேர் காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் லோடு ஆட்டோவை ஓட்டி வந்த சுடலை வீரன் மற்றும் வடிவேலு பெரும்படையான் ஆகிய மூன்று இளைஞர்களை உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இன்று பெரும்படையான் (20), பெருமாள் (25) ஆகிய இரண்டு இளைஞர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் வடிவேலு (17) என்ற சிறுவனும் உயிரிழந்தான்.
இந்த சம்பவத்தையடுத்து லாரியை ஓட்டி வந்த திருநெல்வேலியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.









