தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஊர் எல்லையில் அமராவதி குளத்திற்கு செல்லும் வடிகால் ஓடை உள்ளது. இந்த ஓடை ஆனது கடந்த 2023-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது சேதம் அடைந்து அதன் தடுப்பு சுவர்கள் பெயர்ந்து அந்தரத்தில் பெரும் பள்ளத்துடன் காட்சியளிக்கிறது. இந்த நிலையில் இந்த ஓடையின் அருகில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பு பொதுமக்களும் வியாபாரிகளும் சமூக ஆர்வலர்களும் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இதில் தடுப்பு சுவர் கட்டுவதற்கு காலதாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் அந்த தடுப்பு சுவரின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உட்பட இருவர் பைக்கில் வந்த போது திடீரென இருசக்கர வாகனத்துடன் தடுப்பு சுவர் இல்லாத வடிகால் ஓடையில் தவறி விழுந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் வந்த சக வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்த இருவரையும் மீட்டனர். தொடர்ந்து இருசக்கர வாகனத்தை மீட்டு அனுப்பி வைத்தனர். இது குறித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது. மேலும் அந்த பகுதியில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.







