குலசையில் சுற்றுச்சூழல் அபாயம்: கடல் அரிப்பால் அழியும் பனந்தோப்புகள்

0
616

குலசேகரப்பட்டினம் பகுதியில் கடல் அரிப்பால் காவு வாங்கப்படும் பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்துள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி நாசரேத் திருமண்டிலத்தில் திருமறையூர் பாஸ்டேட் சேர்மனும் திருமண்டிலத்தின் சுற்றுச் சூழல் கரிசனைத் துறையின் இயக்குநருமான
கூறியதாவது:


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா குலசேகரப்பட்டினம் பனந்தோப்புகளுக்கு பெயர்பெற்ற இடமாக திகழுகின்றது. பனைப் பொருள் உற்பத்தி மையமும் இங்கு உள்ளது. இங்கிருந்து பனைப் பொருள் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியான காலமும் உண்டு.

அப்படிப்பட்ட குலசேகரப்பட்டினம் கிராமம் இப்போதுபுதிய துறைமுகம் மற்றும் ராக்கெட் ஏவுதளம் அமையவிருக்கும் முக்கியமான ஒரு இடமாக மாறியுள்ளது . சமீபகாலமாக, இக்கிராமத்தில் கடற்கரையில் செழித்து வளர்ந்திருக்கும் பனைமரங்களுக்கு கடல் அரிப்பினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாறிவரும் காலநிலை மாற்றத்தினாலும், உயர்ந்துவரும் புவி வெப்பத்தினாலும், பூமியானது பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றது.

புவி வெப்பமயமாதலினால் இன்று பெருமளவு மாற்றங்கள் புவியில் நிகழ்ந்து வருகின்றது. பனிப்பாறைகள் உருகுவதினால் கடல்மட்டம் அதிகமாக உயர்ந்து வரும் அபாயம் அதிகரித்துள்ளது. குலசேகரப்பட்டினம் கடற்கரை அதற்கொரு எடுத்துக்காட்டாய் உள்ளது.

சமீப காலமாக கடலில் ஏற்பட்டு வரும் மாற்றத்தினால் கடல்நீர் பெருமளவு கரைப்பகுதியை நெருங்கியுள்ளது. இதன் விளைவாக கடற்கரை அருகே செழித்து வளர்ந்துள்ள பனைமரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டுள்ளன.சுமார் ஆறு அடி ஆழத்திற்கு மணல் அரிக்கப்பட்டு பனை மரங்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது பனைமரங்கள் இருந்த கடற்கரைகள் அழிவிலிருந்து பெரிதும் காக்கப்பட்டிருந்தன . இப்பேர்ப்பட்ட இயற்கை அரண்களாய் அமைந்திருந்த பனைமரங்கள் இப்போதுகடல் அரிப்பினால் சாய்ந்து கிடக்கின்றன. இதேநிலை நீடிக்குமென்றால் இன்னும் ஒருசில மாத காலத்திற்குள்ளாக குலசேகரப்பட்டினம் பகுதி கடற்கரையில் இருக்கும் பனைமரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்துவிடும்.

கற்பகத்தரு என்றழைக்கப்படும் பனைமரங்களின் அழிவு சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. அரசு இதில் கவனம் கொண்டு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு கடல் அரிப்பை தடுப்பதற்கு ஆவண செய்ய வேண்டும். பொது மக்களும் இயற்கை அழிவு குறித்து மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here