மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவரக்கோட்டை அருகேயுள்ள பாண்டியன் நகர் கிராமத்தில் ’தொம்பன்’ இனத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் நிலம் வாங்கிய ஊராட்சி தலைவர் செல்வராஜ், வீட்டுமனை அமைத்து விற்பனை செய்யும் நோக்கத்தில் தொம்பன் இன மக்களின் வீடுகளை காலி செய்யுமாறு மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது.

இதனால், பாண்டியன் நகர் கிராமத்தை சேர்ந்த தொம்பன் இனப் பெண்கள், குழந்தைகள் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில், ‘80ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். பட்டா வழங்க கூறி அரசிடம் பல முறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் தனது அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி மிரட்டுகிறார்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமாரிடம் கோரிக்கை விடுத்தும் இந்த அவலம் நீடிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.














