விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதிக்குட்பட்ட முடுக்கன்குளம், நரிக்குடி, கட்டனூர்,நாலூர்,பட்டமங்களம் போன்ற 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நெல் கொள்முதல் நிலையங்களை சுற்றியுள்ள 200 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை குறித்த காலத்தில் வாணிப கழகத்திற்கு ஏற்றிச் செல்ல லாரிகள் வராததால் கடந்த ஒரு மாத காலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 50-ஆயிரத்திற்கு மேற்பட்ட நெல் மூடைகள் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கின்றன.
கடந்த மூன்று நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக இந்த நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. மேலும், நெல் கொள்முதல் செய்யப்பட்டு வெகு நாட்களாகிய நிலையில் மழையில் நனைந்த நெல் முளைத்துள்ளன,
ஓரிரு இடங்களில் முறையான பாதுகாப்பின்றி எலிகள் மற்றும் கால்நடைகளால் நெல் மூடைகள் அனைத்தும் சேதமடைந்து நெல் மணிகள் சிதறி கிடக்கின்றன. இதனால் அரசுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
நெல் மூடைகளை வாணிப கழகத்திற்கு ஏற்றிச் செல்ல மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.