கோவையில் புதிய தார்ச்சாலைகளை செப்பனிடும் பணிகளை தொடங்கிவைத்த மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கரும்புக்கடை அருகேயுள்ள சாரமேடு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் மின்சார கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுவதாக சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், ’தகவலை புரிந்து கொள்ளாமல் ஓ.பன்னீர்செல்வம் போல் கேள்வி கேட்காதீர்கள்’ என அவரை ஓட்டினார். அடுத்து, மின்சாரம் தொடர்பாக வேறு பணிகளுக்கு மட்டுமே கடந்த 2017ம் ஆண்டு முதல் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுவதாகவும், இதனை மறந்துவிட்டோ அல்லது மறைத்துவிட்டோ அவர் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் விளக்கினார். விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்கும் கடந்த 2016 முதல் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இணைப்பு பெறாமல் உள்ள 4.52 லட்சம் விவசாயிகளில், 1 லட்சம் விவசாயிகளுக்கு நடப்பாண்டில் இணைப்பு தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.













