சாரதா நிதி நிறுவன மோசடியில் சி.பி.ஐ. அதிகாரிகளால் தேடப்படும் கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் கொல்லப்படலாம் என மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா அச்சம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சோமன் மித்ரா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சாரதா ஊழல் தொடர்பாக விசாரணை செய்ய திரிணாமுல் காங்கிரஸ் அரசின் சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழுவின் தலைவராக ராஜீவ் குமார் இருந்தார். பின்னர் இவ்விவகாரம் தொடர்பான விசாரணையை 2014-ம் ஆண்டில் சி.பி.ஐ. ஏற்றுக்கொண்டபோது அரசியல் பலமிக்க ஆளும்கட்சி பிரமுகர்களுக்கு எதிரான பல உண்மைகளை மறைக்க ராஜீவ் குமார் முயற்சி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவ்வழக்கில் ஆளும்கட்சியை சேர்ந்த பல்வேறு பிரமுகர்களை சி.பி.ஐ. கைது செய்து விசாரித்தது.
எனவே, சி.பி.ஐ. பிடியில் ராஜீவ் குமார் சிக்கி வாக்குமூலம் அளித்தால் அரசியல் பலமிக்க பலருக்கு சிக்கல்கள் ஏற்பட்டு விடும். அதனால்தான் அவரை பாதுகாக்க மாநில அரசு முயற்சித்து வருகிறது.
அவரை வாக்குமூலம் அளிக்க விடாமல் நிரந்தரமாக அமைதியாக்கி விடவும் முயற்சிகள் நடக்கலாம்.எனவே, ராஜீவ் குமார் கொல்லப்படலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம்’ என தெரிவித்துள்ளது பரபரப்பாகியுள்ளது.












