நீலகிரி மாவட்டம், வெலிங்டன் ராணுவப் பயிற்சி பள்ளியில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டரில் சென்ற முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்பட 13 போ் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக ஏா் மாா்ஷல் மனவேந்திர சிங் தலைமையிலான விசாரணைக் குழுவினா் விசாரித்து வருகின்றனா். இந்நிலையில் விபத்து நடப்பதற்கு முன்பு அந்த ஹெலிகாப்டா் வானில் பறப்பதும், சிறிது நேரத்தில் மேகக்கூட்டத்தில் மறைவது போன்ற காட்சிகளும், பின்னா் கீழே விழுவது போன்ற சப்தத்துடன் விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இது விபத்து நடைபெறுவதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கடைசி விடியோ எனக் கூறப்படுகிறது.
முப்படைத் தலைமைத் தளபதி சென்ற அதிநவீன ராணுவ ஹெலிகாப்டா் விபத்து நடப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட விடியோ இது என்பதால் போலீஸாா் இதனை முக்கிய ஆதாரமாக கருதினா். இதையடுத்து விடியோவை கைப்பற்றி விசாரணை நடத்த முடிவு செய்த போலீஸாா், ஹெலிகாப்டா் விபத்து நடப்பதற்கு முன்பு அதனை விடியோ எடுத்த நபா்கள் குறித்து விசாரித்தபோது, அவா்கள் கோவையைச் சோ்ந்த ஜோ பால் மற்றும் அவரது நண்பா் நாசா் என்பது தெரியவந்தது. (நாசரின் பேட்டி தென்னாடு.காமில் ஏற்கனவே வந்தது).
இதையடுத்து, மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வந்த இருவரும் தங்களது செல்போனை போலீஸாரிடம் ஒப்படைத்து விசாரணைக்கு ஒத்துழைப்பதாகக் கூறினா். இதையடுத்து அந்த செல்போனை கைப்பற்றிய போலீஸாா் அதை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அதன் உண்மைத் தன்மையை நிபுணா்கள் ஆய்வு செய்து வருகின்றனா்.














