அமேசான் காடுகளில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் தீயை அணைக்க பிரேசில் போராடி வருகிறது. கால்நடைப் பண்ணைகள் வைத்திருப்பவர்களும், மரம் வெட்டுபவர்களும் மூட்டிய தீ தான் அமேசான் காடுகளை அழித்து வருகிறது.
ஆனாலும், இப்பிரச்னையை பிரேசில் அரசு கையாண்ட விதம் குறித்து ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தொண்டு நிறுவனத்தினருக்கு நிதி வழங்கியதை நிறுத்தியதால் அவர்கள் தீ வைத்ததாக பிரேசில் அதிபர் மாக்ரான் கூற, அரசுதான் தீவிபத்துக்கு காரணம் என அவர்கள் பதிலுக்கு குற்றஞ்சாட்டினர்.
இவர்களின் சக்களத்தி சண்டைக்கிடையே தீ வேகமாக பக்கத்து நாடுகளுக்கும் பரவியது. பிரேசிலில் இருந்து ஏற்றுமதியாகும் மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் அவசரமாக பரிசீலிக்க வேண்டும் என பிரான்ஸ், ஃபின்லாந்து, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளதையடுத்து தீயணைப்பு பணிக்கு ராணுவத்தை அனுப்ப அதிபர் உத்தரவிட்டார்.
ஏற்கனவே 74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், பிரேசிலின் ராணுவமும் களத்தில் இறங்கியுள்ளது. விமானம், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை மூலம் தீயை அணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இவர்களெல்லாம் நிர்பந்தத்தால் கடமையாற்ற, அமேசான் பழங்குடியினர் உணர்வுப்பூர்வமாக தீயுடன் போராடி வருகின்றனர். ‘எங்கள் கடைசி துளி ரத்தம் இருக்கும் வரை போராடி தீயை அணைப்போம்’ என என அவர்கள் கூறினர்.
தீயை விரைந்து அணைக்க நடவடிக்கை எடுக்க கோரி ரியோ டி ஜெனிரோ மற்றும் சா பாலோ நகர்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர், தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர். காட்டுகளுக்கு தீ வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.
அமேசான் காட்டுத் தீயை அணைக்க உலக நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரேசில் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், தீயை அணைக்க தேவையான உதவியை செய்யத் தயார் என்று அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.













