கன்னியாகுமரி சிலுவை நகரைச் சேர்ந்தவர் மரிய டெல்லஸ் (வயது 42). கன்னியாகுமரி கடற்கரையில் மரிய டெல்லஸ் பாசி மாலைகள் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி அருள் சுனிதா (37). இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகன் பிளஸ்-2 படிக்கிறார். மகள் எஸ்.எஸ்.எல்.சி. படித்து கொண்டிருக்கிறார்.
மரிய டெல்லஸ் பாசி மாலைகள் விற்பனை செய்யும் பணத்தை குடும்பச் செலவிற்கு கொடுப்பதில்லை. மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்தே பணத்தை செலவழித்தார்.
குடும்பச் செலவிற்கு பணம் கொடுக்காததால் மரிய டெல்லசுக்கும், அவரது மனைவி அருள் சுனிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். அப்போது மரிய டெல்லஸ் மனைவி அருள் சுனிதாவை அடித்து உதைப்பது வழக்கம்.
கடந்த ஆண்டு மனைவியை தாக்கியதால் அவர், இதுபற்றி போலீசில் புகார் செய்தார். போலீசார் மரிய டெல்லசை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். தண்டனை முடிந்து வெளியே வந்த மரிய டெல்லஸ், இனி மனைவியை தாக்க மாட்டேன் என்று போலீசில் எழுதிக் கொடுத்தார்.
இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்ற மரிய டெல்லஸ் வீட்டிற்கு திரும்பி வந்தபோது போதையில் வந்தார். இதனை மனைவி அருள் சுனிதா தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த மரிய டெல்லஸ் மனைவி அருள் சுனிதாவை சரமாரியாக தாக்கினார். அடி தாங்காமல் வீட்டை விட்டு அருள் சுனிதா வெளியே ஓடி வந்தார். அவரை அருகில் உள்ள 10 அடி ஆழ பள்ளத்தில் மரிய டெல்லஸ் தள்ளி விட்டார்.
கீழே விழுந்த அருள் சுனிதாவை மீண்டும் கல்லால் தாக்கினார். இதில் அருள் சுனிதா படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அருள் சுனிதா பரிதாபமாக இறந்து போனார்.
கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருள் சுனிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மரிய டெல்லசையும் கைது செய்தனர்.









