தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பத்துபட்டி பகுதியை சேர்ந்த பாண்டிச்சாமி மகன் வீரசின்னு (36) துபை பஹ்ரைன் பகுதியில் கடந்த 2 வருடங்களாக கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியலெட்சமி என்ற மனைவியும், 9 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் துபைக்கு வேலைக்கு சென்றிருந்த வீரசின்னு தனது மனைவியிடம் செல்போன் மூலமாக 20.10.2021 அன்று இரவு 11.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்து விடுவதாக தெரித்துள்ளார். அதன்படி அவரது மனைவி பாக்கியலெட்சுமி தனது உறவினர்களான அழகு மற்றும் சமுத்திரராஜ் ஆகிய இருவரையும் சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி கணவர் வீரசின்னுவை அழைத்து வருமாறு கூறியுள்ளார்.
இருவரும் சென்னை விமான நிலையம் சென்று பார்த்தபோது வீரசின்னு அங்கு இல்லாததால், அவர் வரவில்லை என அவரது மனைவி பாக்கியலெட்சுமியிடம் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே பாக்கியலெட்சுமி துபையிலுள்ள வீரசின்னுவின் நண்பரான வேல்முருகனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதில் வீரசின்னுவை விமானத்தில் ஏற்றி விட்டதாக கூறியுள்ளார். ஆனாலும் கணவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் 24.10.2021 அன்று பாக்கியலெட்சுமி தூத்துக்குடி மாவட்டம் புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படையினர் சென்னையில் பல்வேறு இடங்களில் புகைப்படத்தை வைத்து விசாரணை செய்தபோது சென்னை புளிச்சனூர் பகுதியில் ஒருவர் இரண்டு நாள்களாக சுற்றித்திரிவதாக தகவல் கிடைத்தது. அவரை கண்டுபிடித்து விசாரணை செய்ததில், அவர்தான் வீரசின்னு என்பதை உறுதி செய்த தனிப்படையினர், சென்னையிலிருந்து அழைத்து வந்து அவரது மனைவி பாக்கியலெட்சுமியிடம் இன்று ஒப்படைத்தனர்.
காணாமல்போனவரை விரைந்து கண்டுபிடித்து உறவினரிடம் ஒப்படைத்த மேற்படி விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.









