கோவை சாய்பாபா காலனி கணபதி லேஅவுட்டை சேர்ந்தவர் அருண்பிரசாத் ( 41).திருமணமான இவர் முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் மருமகன் ஆவார். ரியல் எஸ்டேட் நிறுவனம், ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வந்தார் . இந்த நிலையில் கோவை பீளமேடு அடுத்த சித்ரா சசி அவென்யூ பகுதியை சேர்ந்த செங்குட்டுவன் என்பவருடைய மகள் சிந்துஜாவுடன் அருண்பிரசாத்துக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து தொழில் செய்யலாம் என்று சிந்துஜாவிடம் அருண்பிரசாத் கூறினார். இதனை சிந்துஜா நம்பினார். தனது தந்தை செங்குட்டுவனிடம் கூறினார். தனது மகளுடன் சேர்ந்து தொழில் செய்வதாக கூறியதால் செங்குட்டுவன் அருண்பிரசாத்துக்கு ரூ.1½ கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் செங்குட்டுவன் கோவை நகர குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார் அந்த புகாரில் அருண்பிரசாத் தன்னிடம் ரூ.1½ கோடி வாங்கியிருந்தார் ஆனால் அந்த பணத்தை திரும்ப தரவில்லை. நாங்கள் பணத்தை திரும்ப கேட்ட போது வால்பாறையில் தேயிலை எஸ்டேட் விற்று பணத்தை தருவதாக கூறினார் .மேலும் இரண்டு காசோலைகளை கொடுத்தார். ஆனால் அந்த காசோலைகள் பணமின்றி திரும்பி வந்தது. பணத்தை திரும்ப தராததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் உத்தரவின்பேரில்
மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பார்த்திபன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரவி சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் .விசாரணையை தொடர்ந்து அருண் பிரசாத் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு அவினாசி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். மோசடி வழக்கில் கோவை தங்கம் மருமகன் கைதான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.













