கோவை ஒண்டிப் புதூரை அடுத்த எஸ் ஐ எஸ் எஸ் காலனி கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்த சாமுண்டி என்பவரின் மகன் தாமஸ் சாக்கோ (26). இவர் எம்சிஏ படித்து முடித்துவிட்டு கோவை டைடல் பார்க்கில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும் அவரது வீட்டின் அருகிலேயே ஆட்டுப்பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார் .அதில் 30 ஆடுகளை வளர்த்து வந்தார் .
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆட்டுப் பண்ணையில் இருந்து இரண்டு ஆடுகள் காணாமல் போனது. இதையடுத்து தாமஸ் சாக்கோ ஆடுகளை பல இடங்களில் தேடி வந்தார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. அவர் ஆடுகளை தேடிவிட்டு வரும்பொழுது தாமஸ் சாக்கோவின் ஆட்டுப் பண்ணை அருகே இரண்டு வடமாநில வாலிபர்கள் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தாமஸ் bசாக்கோ அவர்களிடம் கேள்வி எழுப்பினர்.
குடிபோதையில் இருந்த அவர்கள் தாமஸ் சாக்கோவை தாக்க தொடங்கினர். .இதையறிந்த வடமாநில வாலிபர்களின் மற்ற நண்பர்களும் அங்கு ஓடிவந்து தாமஸ் சாக்கோ மீது தாக்குதல் நடத்தினர். அருகிலிருந்த செங்கல் மற்றும் கற்களை எடுத்து தாமஸ் சாக்கோ மீது நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து தாமஸ் சாக்கோ சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பில்துசா (50) மனுஷா( 24 ),அஜய்சா(43) லாலா குமார் (21) பிபின் குமார் (26) மணிஸ் குமார்( 22), விகிஷா (27), சோனுசா (30 )ஆகிய எட்டு பேரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.













