சாதி சங்கத் தலைவர்களில் குறுகிய காலத்தில் புகழ் பெற்றவர் ஹரி நாடார். சுபாஷ் பண்ணையாரின் பனங்காட்டு படையில் சேர்ந்து, ராக்கெட் ராஜா ஆதரவுடன், கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகள் பெற்று களிப்போடு இருந்த வேளையில், கேரளா,கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் இருந்து ஈட்டியாய் பாய்ந்த சீட்டிங் வழக்குகளில் சிக்கி, கர்நாடக பரப்பன அக்ரகார சிறையில் கம்பி எண்ணிய போதும் துயரம் அவரை துரத்துவதாக புலம்புகிறார்.

சிறைக்குச் செல்லும் முன்பு ஹரி நாடாருக்கு மலேசியாவைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் மஞ்சுவின் தொடர்பு கிடைத்தது. அதுமுதல் குடும்ப வாழ்வில் விரிசல் ஏற்பட்டு அவரது மனைவி சாலினி பிரிந்து வாழ்ந்தார். இருவருக்குமிடையே விவாகரத்து வழக்கு நடப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து ஹரி நாடார் நெல்லை எஸ்பிக்கும் பாளை மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டருக்கும் வக்கீல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், சாலினி அனாதை என்று கூறி தன்னை ஏமாற்றி மணம் முடித்த தாகவும், தற்போது சிறையில் இருக்கும் தனக்கு உதவி வரும் மஞ்சுவிடம் இருந்து பிரிக்கும் நோக்கத்துடன், அவர் கட்டுப்பாட்டில் தான் இருப்பதாக மகளிர் போலீசில் புகார் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பனங்காட்டு படை தலைமை தன்னை உள்ளேயே வைத்திருக்க ஆசைப்படுவதாகவும், தலைமையின் எண்ணப்படி மனைவி சாலினி செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.













