கோவையை சேர்ந்த 17 வயது மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருபவர் நாகராஜ் (22) என்பவருக்கும் பேஸ் புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 2 பேரும் செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு அடிக்கடி பேசி பழகி வந்தனர். மேலும் அவர்கள் நேரில் சந்தித்தும் பேசி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, அந்த கல்லூரி மாணவிடம் காதலிப்பதாக நாகராஜ் கூறினார். இதை நம்பிய கல்லூரி மாணவியும் அவரை காதலித்ததாக தெரிகிறது. இதற்கிடையே நம்முடைய காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள். எனவே நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நாகராஜ் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நாகராஜ் கூறியபடி அந்த மாணவி வீட்டை விட்டு வெளியேறி கோவையில் தயாராக இருந்தார். அதன்படி நாகராஜ் கோவை வந்து, அந்த கல்லூரி மாணவியை அழைத்துக் கொண்டு திருப்பூர் சென்றார். அங்கு தான் தங்கி இருந்த வீட்டில் வைத்து மாணவிக்கு நாகராஜ் தாலி கட்டினார். பின்னர் அவர்கள் 2 பேரும் கணவன் மனைவி போல வாழ தொடங்கினர்.
சிறிது நாட்கள் மகிழ்ச்சியாக சென்ற நிலையில், நாகராஜ், அந்த மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு செய்தார். மேலும் அந்த மாணவியை 3 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி நாகராஜிடம் இருந்து தப்பித்து கோவையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர், நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் நாகராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் நாகராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.













