மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, மேலக்கால் கிராமத்தில் உள்ள தெற்கு தெரு பகுதி பாஸ்கரன் தெருவில் குடிநீர் தெருவிளக்கு ரோடு மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க கோரி, இப் பகுதியில் குடியிருக்கும் மக்கள் 20 ஆண்டாக தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இது குறித்து, வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாண்டியன், அப்பகுதிக்கு ஆய்வு செய்ய வந்தபோது, அப்பகுதி மக்கள் ஆணையாளரிடம் குடிநீர் மற்றும் தெருவிளக்கு, பேவர் பிளாக் அமைத்துத் தர கோரி, நேரடியாக முறையிட்டனர்.
இதுகுறித்து லீலாவதி (58), பிரியா (35) ஆகியோர் கூறும்போது: நாங்கள் குடியிருக்க கூடிய பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர் தெருவிளக்கு ரோடு மற்றும் கழிவுநீர் வாய்க்கால் இல்லாததால், பல்வேறு சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டு வருகிறோம். நாங்களும், எங்கள் வார்டு உறுப்பினரிடம் பலமுறை கூறி உள்ளோம். அதற்கு எங்கள் வார்டு மெம்பர் ’எனக்கா ஓட்டு போட்டீர்கள்?’ என்று ஏளனமாக பேசி எங்களை புறக்கணித்து வருகிறார். ஆகையால் ,நாங்கள் வாடிப்பட்டி ஆணையரிடம் தெரிவித்தோம். அவர் எங்களது கோரிக்கையை ஏற்று நாங்கள் குடியிருந்த பகுதிக்கு வந்து ஆய்வு செய்தார் .எங்களது கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காண்பதாக கூறிச் சென்றுள்ளார்” என்றனர்.












