நடிகர் சூர்யா நடிக்கும் பட ஷூட்டிங்கிற்காக டம்மி துப்பாக்கிகள் கொண்டு சென்றது தெரியவந்தது.
சென்னை சி.எம்.பி.டி 100 அடி சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அருகே நள்ளிரவில் சி.எம்.பி.டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவரை நிறுத்தி அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். பையில் இரண்டு துப்பாக்கிகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்து உடனடியாக அந்த நபரை சி.எம்.பி.டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நபர் பெரம்பூர் கஸ்தூரிபாய் காலனி பகுதியை சேர்ந்த விக்டர் (27) என்பது தெரியவந்தது. விக்டர் பிரபல திரைப்பட இயக்குனரான பாண்டிராஜ் என்பவரின் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருவது தெரியவந்தது. மேலும் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் என்ற படத்தை இயக்கிவருவதாகவும், அந்த படப்பிடிப்புக்காக இரண்டு டம்மி துப்பாக்கிகள் தேவைப்பட்டதால் விக்டர் துப்பாக்கியை வாங்கி கொண்டு கோயம்பேடு நிலையத்திலிருந்து பேருந்து மூலமாக டம்மி துப்பாக்கியை காரைக்குடிக்கு அனுப்பி வைக்க சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் டம்மி துப்பாக்கிக்கு உண்டான ஆவணங்கள் விக்டரிடம் இல்லாததால் சி.எம்.பி.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.














