மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூரில் கடந்த 2012 ஆம் ஆண்டு மத்திய அரசால் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது . அமைக்கப்பட்ட நாள் முதலே உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கும் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கும் வாக்குவாதங்களும் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்றன .
நகர் பகுதியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும் என்ற விதிக்கு மாறாக 1.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால் உள்ளூர் வாகன ஓட்டிகள் நீதிமன்றத்தை நாடினர். அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக சுங்கச்சாவடி நிர்வாகத்தினரால் உள்ளூர் வாகன ஓட்டிகள் ஒவ்வொருவருக்கும், தங்களது வாகனம் இரண்டு ஆண்டுகளாக ஆயிரத்திற்கு மேற்பட்ட முறை சுங்கச்சாவடியை கடந்துள்ளதால் ரூபாய் 1.50 லட்சம் முதல் 2 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என வழக்கறிஞர் மூலமாக தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த பிரச்சனை பெரும் விஸ்வரூபம் எடுத்திருந்த நிலையில், தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர் பி உதயகுமார்,எம் எல் ஏ ஐயப்பன் உட்பட கட்சி நிர்வாகிகள் 150 க்கும் மேற்பட்டோர்
சுங்கச்சாவடி அருகில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
காவல்துறையினர்
அனுமதியின்றி நடத்தப்பட்ட போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர்.
அதற்கு, ஆர்பி உதயகுமார் அமைதியான முறையிலேயே போராட்டம் நடத்துவதாகவும் , வீன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீசார் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறினார்.
இந்நிலையில், காவல்துறையினர் முன்னாள் அமைச்சரையும் எம்எல்ஏ உள்ளிட்ட கட்சியினரையும் வலுக்கட்டாயமாக கைது செய்து பேருந்தில் ஏற்றினர் .
இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.














