சென்னை பன்னாட்டு விமான நிலைய தபால் சரக்ககப் பிரிவுக்கு வெளி நாட்டில் இருந்து வரும் பார்சலில் பெரும் அளவில் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தபால் சரக்ககப் பிரிவுக்கு வந்த பார்சல்களை தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது ஜெர்மணி நாட்டில் இருந்து சென்னையில் உள்ள ஒரு முகவரிக்கு பார்சல் வந்திருந்தது. அதில் வாழ்த்து அட்டைகள் இருப்பதாக இருந்தது. அந்த பார்சலை பிரித்து பார்த்த போது 100 பச்சை நிற போதை மாத்திரைகள் இருந்தன.

ரூ. 5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள முகவரிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது முகவரி போலியானது என தெரியவந்தது. இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.













