தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணிகள் ரயிலானது வரும் 19ஆம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பாலருவி ரயில் தூத்துக்குடியில் இருந்து கிளம்புவதால் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருநெல்வேலி – தூத்துக்குடி திருநெல்வேலி ரயில்களை ரத்து செய்யக் கூடாது என்று பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க செயலாளர் மா. பிரமநாயகம், தெற்கு ரயில்வே கோட்ட மேலளாருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், “பாலருவி விரைவு ரயில் தினசரி இயக்கப்பட்டதால், வண்டி எண் 06688/06687 திருநெல்வேலி-தூத்துக்குடி ரயில்கள் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் 19-08-2024 முதல் ரத்து செய்ய உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது முற்றிலும் அதிர்ச்சியூட்டும் நடவடிக்கை எடுத்து இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.

இந்த ரயில் ரத்து செய்யப்படும்போது நாரைக்கிணறு, கைலாசபுரம், மணியாச்சி, ஒட்டநத்தம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து தூத்துக்குடிக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு வரும் பயணிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஆதலால் தூத்துக்குடி- திருநெல்வேலி-தூத்துக்குடி ரயில்களை ரத்து செய்யும் நடவடிக்கையை “ரத்து செய்யுமாறு” கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.










