கோவை தொண்டாமுத்தூர் விவேகானந்தர் நகர் பகுதியில் குடியிருப்பவர் ராமசாமி (78) , இவர் முன்னாள் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர். இவருக்கு திருமணமாகி ரத்தினம் (75) என்ற மனைவி உள்ளார் . இவர்கள் மகன் பெங்களூரில் வேலை செய்து வருகிறார்.
கணவன் மனைவி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று கடந்த வாரம் வீடு திரும்பினர். தனிமைப்படுத்திக் கொள்ள இருவரும் தனித்தனி அறையில் தங்கள் தனிமை படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் ராமசாமி வீட்டில் இரண்டு மர்ம நபர்கள் சமையல் அறை அருகே உள்ள கதவைத்திறந்து வீட்டிற்குள் நுழைந்து உள்ளனர். ராமசாமி தங்கியிருந்த அறையைப் பூட்டிவிட்டு அருகில் அவரது மனைவி ரத்தினம் அறைக்குள் நுழைந்தனர். அங்கே தூங்கிக் கொண்டிருந்த ரத்தினத்தின் கழுத்திலுள்ள 8 1/2 பவுன் தங்க சங்கிலி , கையில் அணிந்திருந்த 3 பவுன் தங்க வளையலை வெட்டி எடுத்து தப்பினர். சத்தம் கேட்டு எழுந்த முதாட்டி சத்தம் போட்டு அருகே உள்ள கணவரின் அறையை திறந்து விட்டு விஷயத்தை கூறினார்.
உடனடியாக இருவரும் தொண்டாமுத்தூர் காவல் நிலையம் சென்று தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போத்தனூர் பகுதியில் வங்கி மேனேஜர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையை அடுத்த கண்ணம்பாளையம் கம்பர் வீதியைச் சேர்ந்தவர் பிரபு( 33), இவர் சிங்காநல்லூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குச் சென்றார்.பின்னர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது அதிலிருந்த பீரோவைத் திறந்து அதில் இருந்த பணம் ரூபாய் 85 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பிரபு போத்தனூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியை பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.











