சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் விஜயராஜ்குமார், நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, செயல் இயக்குநர் ஆகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஆய்வு கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ,
‘ மீஞ்சூர் மற்றும் வட நெம்மேலியில் 100 எம்.எல்.டி அளவிற்கு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப் பட உள்ளது. சென்னையில் நாள் ஒன்றுக்கு 1100 எம்.எல்.டி குடிநீர் தேவைப்படுகிறது.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை வராத அளவிற்கான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
400 எம்எல்டி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 3 வருடத்தில் நிறைவு பெறும். 600 எம் எல் டி கு டி நீ ர் காவிரியில் இருந்து கொண்டு வர திட்டம் உள்ளது.
பாதாள சாக்கடை திட்டத்தை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழை நீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்து திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத அளவிற்கு ஆகாய தாமரையை அப்புறப்படுத்தும் 3 கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.
சென்னையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் விதமாக குடிநீர்க்கு மீட்டர் பொருத்தப்பட்டு வீடுகள் தோறும் தண்ணீர் வழங்கப்படும். சென்னை மாநகராட்சியில் உள்ள மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை கண்டறிந்து, அதை மக்கள் இயக்கமாக மாற்றி மழை நீர் சேமிக்க திட்டமிட பட்டுள்ளது.
, பேரூராட்சிகளை நகராட்சிகளாக அமைக்கும் திட்டத்தை முதல்வர் ஆலோசித்து முடிவு எடுப்பார் என்றும் நாளிதழ்களில் வரும் செய்திகளை நம்பவேண்டாம்.
செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என முதல்வர் ஏற்கனவே அறிவித்துள்ளார். சில இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம், மகளிர்க்கு இடஒதுக்கீடு போன்ற குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவற்றை கலைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்’என்றார்.












