சென்னை மண்ணடியில் அங்கப்பன் நாயக்கன் தெருவில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அமைப்பின் தலைவராக சமீபத்தில் ஹைதர் அலி என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து, புதிய நிர்வாகிகளின் பெயர்கள் அடங்கிய பேனரை கட்சி அலுவலகம் முன்பு தமுமுக-வை சேர்ந்த நிர்வாகிகள் மாட்டி உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரண்ட மனிதநேய மக்கள் கட்சியின் 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள், தமுமுக அலுவலகம் முன்பு வைக்கப்பட்டு இருந்த பேனரை அடித்து நொறுக்கினர்.

அதுமட்டுமல்லாது, கட்சி அலுவலகத்தை சூறையாடிய மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் தாக்கியதில் தமுமுக தொண்டர்கள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்.அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரவு 10 மணி அளவில் நடைபெற்ற இந்த மோதலை அடுத்து, பாதுகாப்பு பணிக்காக நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பேனரை கிழித்த பிரிவினரை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இது குறித்து பேசிய தமுமுக நிர்வாகிகள்,
மனித மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா உத்தரவின் பேரிலேயே இந்த தாக்குதல் நடைபெற்று இருப்பதாகவும், இதற்கு காவல்துறையினர் துணையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
மேலும் தமுமுக அமைப்புக்கு ஜனநாயகப்படி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமுமுக-வை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கவே ஜவாஹிருல்லா இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக கூறினர்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை வடக்கு கடற்கரை காவல்நிலையத்தில் தமுமுக தரப்பினர், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் உட்பட அதன் நிர்வாகிகள் மீது, புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலையிட்டு, உரிய நீதியை பெற்று தர வேண்டும் என்றும் தமுமுக நிர்வாகிகள் தெரிவித்தார். இந்த தாக்குதலை கண்டித்து, சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் தமுமுக சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.