வண்டலூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்: மக்கள் தீக்குளிக்க முயற்சி

0
406

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே கீரப்பாக்கம் ஊராட்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 20 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை இரண்டாவது கட்டமாக தாசில்தார் அதிரடியாக அகற்றினார். இதில் தாசில்தாரின் நடவடிக்கையால் கீரப்பாக்கம் ஊராட்சியில் இன்று காலை பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் தாலுகா, காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கீரப்பாக்கத்தில் இருந்து குமிழி செல்லும் சாலையோரத்தில் அரசுக்கு சொந்தமான 100 ஏக்கருக்கு மேல் கல்லாங்குத்து புறம்போக்கு நிலம் உள்ளது. இதனை சிலர் பிளாட் போட்டு விற்று வருவதாக தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு ஆன்லைன் மூலம் புகார் வந்தது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றும்படி வண்டலூர் தாசில்தாருக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் ரங்கன், கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வம் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வருவாய்த் துறையினரும், டிஎஸ்பி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசாரும் பொக்லைன் இயந்திரங்களை எடுத்து வந்து ஆக்கிரமிப்பு பிடியில் இருந்த வீடுகள், கடைகள் ஆகியவற்றை கடந்த 5ஆம் தேதி காலை அதிரடியாக அகற்றினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீரப்பாக்கம் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரிகிருஷ்ணன், முன்னாள் வார்டு உறுப்பினர் வசந்திகண்ணன் மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வீடுகள் மற்றும் கடைகளில் இருக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது முன்னாள் வார்டு உறுப்பினர் வசந்தி கண்ணன் உட்பட உடன்வந்த பெண்கள் தீ குளிப்பதற்காக கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி னர். உடனே போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர்.

இதனை அடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை அதிகாரிகள் நிறுத்தினர். இதனை தொடர்ந்து இன்று காலை மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இன்று அகற்றினர்.

இதனை எதிர்த்து அங்கிருந்த பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை அகற்றியபின்னர் ஆக்கிரமிபுகள் அகற்றப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here