விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாபட்டி, அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம் (22). கூலி வேலை பார்த்துவந்த சுந்தரமகாலிங்கம், நேற்று இரவு
ராமசாமியாபுரம் பகுதியில் நடந்துவந்து கொண்டிருந்த போது, அதே பகுதியின்
மற்றொரு தரப்பைச் சேர்ந்த தாமரை என்பவர், சுந்தரமகாலிங்கத்தை கழுத்துப் பகுதியில் அரிவாளால் வெட்டிவிட்டி தப்பி ஓடிவிட்டார். சுந்தரமகாலிங்கம் அலறல் சப்தம் கேட்டு அங்குவந்த அம்பேத்கர் தெரு பொதுமக்கள், படுகாயங்களுடன் மயங்கி கிடந்த அவரை, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே சுந்தரமகாலிங்கம் இறந்து போனதாக தெரிவித்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.
சுந்தரமகாலிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள், கூமாப்பட்டி முக்கு ரோடு பகுதிக்கு திரண்டு வந்து, சுந்தரமகாலிங்கத்தை வெட்டிக் கொலை செய்த தாமரையை, உடனடியாக கைது செய்யக்கோரி சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை வரை அந்தப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை இருந்து வருவதால், பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












