வயநாடு தொகுதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், நிவாரண முகாம்களில் இருந்த பாதிக்கப்பட்ட மக்களையும் ராகுல்காந்தி பார்வையிட்டார்.
இதுபற்றி அவர் கூறும் போது, “வயநாடு தொகுதியில் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பார்த்ததும் எனது இதயம் நொறுங்கிவிட்டது” என்று தெரிவித்திருந்தார்.
2-வது நாளாக நேற்றும் நிவாரண முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறியதுடன் மாநில அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். அதிகாரிகளிடம், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், மறுகட்டமைப்புக்கு உதவும்படியும், உடனடி தேவையான மருந்து, சீரமைப்புக்கான கருவிகள் போன்றவற்றை வழங்கவும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோருடன் தொலைபேசியில் பேசிய ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட இந்த பகுதிக்கு உடனடியாக உதவிகள் செய்யும்படி வலியுறுத்தினார்.














