தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
இது குறித்த கருத்து கேட்பு கூட்டம் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்யகோபால் தலைமையில் குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தென்காசி தனி மாவட்டம் தனி அதிகாரி அருண் சுந்தர் தயாளன், நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் , போலீஸ் சூப்பிரண்டு, உள்பட தென்காசி, கடையநல்லூர், சிவகிரி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், வீ.கே.புதூர், ஊத்துமலை, அம்பை உள்பட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், தொழில் அதிபர்கள், வக்கீல்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தென்காசியை தலைமையிடமாக கொண்ட தனி மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் ரோட்டில் தென்காசி அருகே அமைக்க வேண்டும்.
அரசுத்துறை அலுவலகங்கள் அனைத்தும் தலைமையிடமான தென்காசியிலேயே அமைய வேண்டும். சங்கரன்கோவிலில் ஒரு சில பகுதிகளை மட்டும் தென்காசி பகுதியில் சேர்த்து விட்டு மற்ற கிராமங்களை நெல்லையிலேயே சேர்க்கலாம்.
தென்காசியை தலைமையிட அலுவலகங்களை ஆயிரப்பேரியில் அரசுக்கு சொந்தமான உள்ள இடத்தில் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்
தொடர்ந்து ஆணையாளர் சத்யகோபால் கூறுகையில், பொதுமக்களின் ஆலோசனைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த கருத்துகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.









