‘காய்ஞ்சிப்போன ஆறுகள் எல்லாம் வற்றாத ஜீவந்தியை பார்த்து ஆறுதலடையும். அந்த ஜீவநதியே காய்ஞ்சிப்போனா…?’ என்ற ‘தங்கப்ப தக்கம்’ பட வசனத்தை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை பார்த்து பேசிக்கொண்டிருந்தனர் சில பணியாளர்கள்.
விசாரித்தபோது, ‘சில நாட்களுக்கு முன்பு காயல்பட்டினம் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தாக்குதல் இருந்தது தெரியாமல் ஆய்வுக்காக அவரிடம் கலந்துரையாடிய கலெக்டர் சந்தீப் நந்தூரி தலை தப்பியது தம்பிரான் புண்ணியமாக கொரோனா பிடிக்கு தப்பினார்.
அதன்பின்பும் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக இல்லாததால் கொரோனா எங்களை பயமுறுத்தி வருகிறது.
கொரோனா கட்டுப்பாட்டு அறை ஊழியர் ஒருவரை பைக்கில் அலுவலகம் கொண்டுவந்து விட்ட சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதியாக, கட்டுப்பாட்டு ஊழியரை கண்டு சக ஊழியர்கள் மிரண்டனர். அந்த ஊழியர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இனியாவது, அலுவலக வளாகங்களில் மருந்து அடிப்பதை மட்டும் வழக்கமாக்காமல், உடல் வெப்ப சோதனை செய்வது, அருகருகே அமர்ந்து பணி செய்யாதவாறு கூடுதல் இடவசதி கொடுப்பது போன்றவற்றை மேற்கொள்ளவேண்டும். வளாகத்தில் உள்ள ஏடிஎம்முக்கு வெளியாட்கள் வருவது வேறு அச்சத்தை அதிகரிக்கிறது’ என்கின்றனர்.
பிறருக்கான பணியாற்றும் அதிகாரிகள், தங்களையும் தற்காத்துக்கொள்வது அவசியம்.














