தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக ஏபி வெங்கடாசலம் இருந்து வருகிறார் . கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரியான வெங்கடாசலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். ஒரு வருடம் மட்டுமே நியமிக்கப்பட்ட வெங்கடாச்சலம் மீண்டும் ஒரு வருடம் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பணி நீட்டிப்பு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று பணிக் காலம் முடிவடையும் போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், வேளச்சேரியில் உள்ள வீடு, சொந்த ஊரான சேலம் ஆத்தூர் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். பல தொழில் நிறுவனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய தடையில்லாச் சான்று வழங்கிய விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கிடைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் வெங்கடாச்சலம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தல் முன்பாக ஏப்ரல் மாதத்தில் மட்டும் 60 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது தெரியவந்துள்ளது.

இதுவரை ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 20 நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துவந்த நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு முன்பு இவ்வாறு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை இந்த சோதனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
தற்போது வரை நடத்தப்பட்ட சோதனையில் 15 லட்ச ரூபாய் பணமும் தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெறுவதற்கு முன்பாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குனராகவும், வனத்துறையில் தலைமை வன பாதுகாவலராகவும் பணியாற்றியுள்ளார். இச்சூழல் மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தின் உறுப்பினராக, கடலோர பாதுகாப்பு குழும உறுப்பினர் ஆக வெங்கடாச்சலம் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.













