‘எப்படி போனாலும் போலீஸ்காரங்க வளைக்கிறார்கள், என்ன செய்யலாம்?’என்று சிந்தித்த ஒரு இளைஞர் செய்த செயல் இது.
வேலூர் ஊசூர் அருகே உள்ள சிவநாதபூரம் மலை பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக அரியூர் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே ‘ஜொமாட்டோ’ டீ சர்ட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
‘நான் ஜொமாட்டோ நிறுவன ஊழியர், உணவு டெலிவரி செய்வதற்காக வந்தேன்’ என்று கூறினார். உடனே காவல்துறையினர் அதற்கான ஆதாரங்களை கேட்டுள்ளனர். அப்போது அவர் ‘இப்போது தான் நேரடியாக வீட்டிற்கு சென்று ஆர்டர் எடுக்க செல்ல உள்ளேன்’ என்று தெரிவித்தார்.
இந்த நடைமுறை ஜொமாட்டோவில் கிடையாது என்பதால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரிடம் மேலும் விசாரித்தனர். அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டனர். அடையாள அட்டை இல்லாததால் அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில், கள்ளச் சாராய பாக்கெட்டுகள் இருந்தன .
தொடர் விசாரணையில் அந்த நபர் காட்பாடி காந்தி நகரைச் சேர்ந்த விஷ்னு ராம்(30) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் சாராயம் வாங்க வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து இது போன்ற தவறுகளில் ஈடுபடக்கூடாது என்று எழுதி வாங்கிக்கொண்டு வழக்கு பதிவு செய்யாமல் காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இது குறித்த தகவல் நேற்று வேலூர் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த நபர் உண்மையாகவே ஜொமாட்டோ நிறுவனத்தில் பணிபுரிகிறாரா, எதற்காக இது போன்று வந்தார் என்பது போன்ற கேள்விகளை வேலூர் செய்தியாளர்கள் ஏழுப்பினர். இதையடுத்து மீண்டும் அந்த நபரை பிடித்து விசாரணை செய்ய உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.