லக்னோ ரெயில் நிலையத்தில் வாழைப்பழம் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோ ரெயில் நிலையத்தை சுற்றிலும் தூய்மையற்ற நிலையில் அசுத்தம் பரவி வருவதால் வாழைப்பழம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகளும், வியாபாரிகளும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். தடையை மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை மக்கள் விரும்பி வாங்கும் வாழைப்பழத்தை, விற்க முடியாத காரணத்தினால் எங்களுக்கு பெரும் இழப்பு நேரிடுகிறது என சிறு வியாரிகள் கூறுகின்றனர்.
“வாழைப்பழம் மலிவானது. பயணத்தின் போது பயணி ஒருவர் உட்கொள்ளக்கூடிய ஆரோக்கியமான, பாதுகாப்பான பழமாகும். அவை அசுத்தத்தை உருவாக்குகின்றன என்பது முற்றிலும் அபத்தமானது. அது உண்மையாக இருந்தால், அதிகமாக அசுத்தம் ஏற்படுத்தும் கழிவறைகளை தடை செய்ய வேண்டும். தண்ணீர் பாட்டில்கள், பாக்கெட் செய்யப்பட்ட தின்பண்டங்களையும் தடை செய்யவேண்டும்.
வாழைப்பழ தோல்கள் ஆர்கானிக் என்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்ததாதவையாகும்” என பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.















