கோவில்பட்டி நடராஜபுரம் 9ஆவது தெருவைச் சேர்ந்த ,நியாயவிலைக்கடை ஊழியர் பாண்டி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2மனைவிகள். முதல் மனைவி மகேஷ்வரி 16 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட, மகேஷ்வரி சகோதிரி கோகிலாவை 2வதாக திருமணம் செய்தார்.
முதல் மனைவிக்கு கவிதா என்ற பெண் மற்றும் மணிகண்டன் என்ற ஆணும், 2வது மனைவிக்கு மகேந்திரன் என்ற சிறுவனுன் உள்ளனர். இதில் கவிதாவிற்கு திருமணமாகிவிட்டது. மணிகண்டன் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்து சிறை செல்வது வழக்கம். .இவர் மீது பல வழக்குகள் கோவில்பட்டி காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில் பாண்டி இறப்பிற்காக பணிக்கொடை பணம் 2லட்சம் ரூபாய் அரசிடமிருந்து சமீபத்தில் கோகிலாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை பங்கிடுவதில் மணிகண்டனுக்கும் கோகிலாவுக்கும் இடையே பிரச்சினை எழுந்துள்ளது. என்றாலும் ஒரு வழக்கில் சிறையில் மணிகண்டன் இருந்ததால் பிரச்சினை பெரிதாகவிில்லை.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த மணிகண்டன் சித்தியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இரு தினங்களுக்கு முன்பு கோகிலாவின் மகன் மகேந்திரன் கன்னியாகுமாரிக்கு கல்வி சுற்றுலா சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று காலையில் சுற்றுலா சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய மகேந்திரன், வீட்டில் தனது தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்தததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அருகில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்க, கோவில்பட்டி டி.எஸ்.பி.ஜெபராஜ் மற்றும் மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து கோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீசார் விசாரணையில், வீட்டில் இருந்த மரச்சேரை உடைத்து, அதில் இருந்த மரக்கட்டையினால் கோகிலாவை அடித்து மணிகண்டன் கொலை செய்ததது தெரியவந்தது. இதையெடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.








