இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கிய எம்எஸ்.டோனி எப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்பதே தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தபோது கடும் விமர்சனத்திற்குள்ளானார் டோனி.
அதன்பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்த நிலையில், ‘ராணுவத்தில் பயிற்சி பெற செல்கிறேன். இரண்டு மாதங்கள் விடுமுறை வேண்டும்’ எனக் கூறி வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் தென் ஆப்பிரிக்கா தொடரில் எம்எஸ்.டோனி பெயர் குறித்து பரிசீலிக்கவில்லை.
இந்நிலையில் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘அந்த போட்டியை என்னால் மறக்க இயலாது. ஸ்பெஷல் நைட். டோனி என்னை பிட்னஸ் டெஸ்ட் போன்று ஓடவைத்தார்’ என பதிவிட்டுள்ளார்.
எம்எஸ்.டோனியுடனான முக்கியமான நிகழ்வை விராட் கோலி தெரிவித்திருப்பதால் டோனி ஓய்வை முடிவு எடுத்திருக்கலாம் என அவரது ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இதற்கிடையில், இன்று இரவு 7 மணிக்கு டோனி நிருபர்களை சந்திக்க போவதாக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் இன்று ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது.
ஆனால் சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறி உள்ளார். ஓய்வு குறித்து தோனி பிசிசிஐ-யிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என கூறினார்.













