புதுச்சேரி நெல்லித்தோப்பை சேர்ந்தவர் மணிமாறன்(43). ஆம் ஆத்மி கட்சியின் தொழிற்சங்க தலைவர். இவர் இன்று (செப்.6) டிஜிபி அலுவலகம் வந்தார். அங்கு திடீரென யாரும் எதிர்பாராத வகையில் கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனை கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் உடனே அவரை தடுத்து அவர் மீதுதண்ணீர் ஊற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரியக்கடை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மணிமாறனை கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் புதுச்சேரியில் போராளிகள் என்ற வாட்ஸ் அப் குழு இயங்கி வருகிறது. இந்த குழுவில் உள்ள சிலர் தனது செல்போனை ஹேக் செய்து தகவல்களை திருடி தன்னையும், தனது குடும்பத்தையும் வாட்ஸ் அப்பில் தரக்குறைவாக வெளியிட்டு ரூ.5 லட்சம் கேட்டு தொடர்ந்து மிரட்டுவதாகவும், இதன் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகார் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு அறிவுரை கூறிய போலீஸார், உருளையன்பேட்டை காவல்நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். டிஜிபி அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.













